கடலில் அனர்த்தத்தில் சிக்கிய 4 மீனவர்கள் – கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு.!!!
(கற்பிட்டி – எம். எச். எம். சியாஜ்)
ஹம்பாந்தோட்டையிலிருந்து சுமார் 354 கடல் மைல் (655 கி.மீ) தொலைவில் ஆழ்கடலில் அனர்த்தத்தில் சிக்கிய “கேஷான் புதா 1” என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்த நான்கு (04) மீனவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட மீனவர்கள் வெள்ளிக்கிழமை (31) காலை இலங்கை கடற்படைக் கப்பலான “சிதுரல” மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டு, பின்னர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அனர்த்தத்தில் சிக்கிய மீன்பிடிக் கப்பலின் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததை அடுத்து, மீன்வள மற்றும் நீர்வளத்துறை உடனடியாக கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு (MRCC) தகவல் வழங்கியது.
அதன்பேரில், மீன்வளத் துறை மற்றும் கடற்படை இணைந்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது.
அந்த நேரத்தில், இலங்கையின் தெற்கில் சுமார் 354 கடல் மைல் தொலைவில் கவிழ்ந்து ஆபத்தில் இருந்த “கேஷான் புதா 1” கப்பலில் இருந்த நான்கு மீனவர்களும் ஒரு இந்தோனேசிய மீன்பிடிக் கப்பலால் மீட்கப்பட்டு, பின்னர் “MV Graceful Star” என்ற வணிகக் கப்பலுக்கு ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர், பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் பேரில், கடற்படைக் கப்பல் “சிதுரல” மீட்பு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு, MRCC கொழும்பின் ஒருங்கிணைப்புடன் மீனவர்களுக்கு முதலுதவி அளித்து, கரைக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது.
இலங்கை கடற்படை, கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் வழிகாட்டுதலின் கீழ், அனர்த்தத்தில் சிக்கிய மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், எந்தவித கடல்சார் அனர்த்தத்திற்கும் உடனடி உதவி வழங்கத் தயார் நிலையில் இருப்பதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.





