இலங்கையில் தினமும் 50 பேர் மதுப் பாவனையால் அகால மரணம் – 2026 பட்ஜெட்டில் வரி உயர்வு அவசியம்.!!!
இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் சுமார் 83 சதவீதம் தொற்றா நோய்களால் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் மதுப் பாவனை ஒரு முக்கியக் காரணியாக விளங்குவதாகவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த நிலையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, மதுப் பாவனையால் தினசரி சுமார் 50 இலங்கையர்கள் அகால மரணமடைவதுடன், ஒவ்வோர் ஆண்டும் 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக, இருதய நோய், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கு மதுப் பாவனை ஒரு முதன்மை காரணியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலைமைக்கு துரித நடவடிக்கை தேவைப்படுவதாக சுட்டிக்காட்டிய தகவல் நிலையம், 2026ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தில் மதுசாரப் பொருட்களுக்கு வரி சரியான முறையில் அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு செய்வதன் மூலம், எதிர்கால சந்ததியினர் மது பாவனையில் சிக்கிக்கொள்ளும் சதவீதத்தை குறைப்பதோடு, மதுப் பாவனையால் ஏற்படும் சுகாதாரச் சுமை மற்றும் பொருளாதாரச் சவால்கள் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.