4 வருடங்களின் பின்னர்; இலங்கைக்கான குவைத் விமான சேவை மீண்டும் ஆரம்பம்.!!!
(கொழும்பு செய்தியாளர்)
கடந்த 2021 டிசம்பர் 31ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த குவைத் ஏர்வேஸ் விமான சேவை, நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இலங்கைக்கான சேவையை இன்று (27) அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது.
இதன் ஆரம்பப் பயணமாக, ஏ-320 நியோ வகை விமானமொன்று குவைத்தில் இருந்து இன்று காலை 9.40 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. குறித்த விமானம் வருகை தரும் வேளையில் பாரம்பரியமான நீர் பாய்ச்சல் மரியாதையுடன் வரவேற்கப்பட்டது.
இம்முதல் விமானத்தில் 94 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இலங்கைக்கு வந்திருந்ததுடன், பின்னர் 105 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் விமானம் மீண்டும் குவைத்திற்கு புறப்பட்டது.
விமானத்தின் வரவேற்பு விழாவில் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் சுனில் ஜெயரத்ன, இலங்கைக்கான குவைத்தின் பிரதி தூதுவர் அல் முஹானா, மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையினரும் கலந்து கொண்டனர்.
இனிமேல் குவைத் ஏர்வேஸ் விமானங்கள், குவைத் நகர சர்வதேச விமான நிலையம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் இடையில் ஒவ்வொரு வாரமும் திங்கள், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










