இலங்கையை வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்: எரிசக்தி நெருக்கடிக்கு இடையே விநியோகம் வலுப்படுத்தல்.!!!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியை முன்னிட்டு, இலங்கையினால் ஆர்டர் செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை (Colombo Port) வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹொங்கொங் நாட்டுக்குச் சொந்தமான ‘Seafrontier’ எனும் எரிபொருள் கப்பலே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது.
இக்கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று காலை முத்துராஜவ (Muthurajawela) எரிபொருள் களஞ்சியகத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், மேலும் ஒரு தொகுதி கொலன்னாவ களஞ்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கப்பலில் 17,000 மெட்ரிக் தொன் 90 ஒக்டேன் பெற்றோல், 18,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 2,800 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல் ஆகிய எரிபொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுக்க அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

