கந்தசாமி பிரபு தலைமையில் காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம்.!!!
(எம்.ரி.எம்)
காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜுத் அவர்களின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் 10.02.2025 திங்கட்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக இக் கூட்டத்தில் ஆராயப்பட்டதோடு, கடந்த 2024ம் ஆண்டில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மற்றும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படாத திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.
அத்தோடு கல்வி, சுகாதாரம், காணி, வீதி அபிவிருத்தி போன்ற திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை மீனவர்களின் மீன்கள் திருடப்படுவது தொடர்பாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிப்பது எனவும் இதில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த அரசாங்கத்தில் அபிவிருத்திக்காக வரும் எந்தவொரு நிதியையும் திருப்பி அனுப்பாத வண்ணம் பார்த்துக் கொள்ளவேண்டும் எனவும்,
அரசாங்க உத்தியோகத்தர்கள் மக்களின் நிலை அறிந்து செயற்பட வேண்டும் என காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தெரிவித்தார்
இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், எம்.எஸ். நளீம், காத்தான்குடி தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரான எம்.பி.எம் .பிர்தௌஸ் நளீமி, உட்பட உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா நகசபை செயலாளர் ரிப்கா சபீன், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் பொறியியலாளர் எம்.எம். தௌபீக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.என். முபீன் மற்றும் திணைக்கள பிரதேச தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , கிராம உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி முகாமையாள்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


