காத்தான்குடி மாணவர்களின்; நேர்மைக்கு பாராட்டு.!!!
(பி.எம். பயாஸ்)
காத்தான்குடி மெத்தைப்பள்ளி வீதியில் தவறவிடப்பட்ட சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான கைப்பேசி, ரூ.54,500 பணம், அடையாள அட்டை, சாரதி உரிமம் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களை கண்டெடுத்த இரு மாணவர்கள், அவற்றை உரியவரிடம் கையளிப்பதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கை அனைவராலும் பாராட்டப்படுகிறது.
குறித்த மாணவர்கள், கண்டெடுத்த பொருட்கள் குறித்து உடனடியாக காத்தான்குடி பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழு பொறுப்பதிகாரி பொலிஸ் உப பரிசோதகர் ஏ.எம்.எம். ஜவாஹிர் அவர்களிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.ஐ பீ. ரத்னாயக்க அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு, அவை சட்டரீதியான நடவடிக்கைகளுடன் உடனடியாக உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நேர்மையான செயலை மேற்கொண்ட மாணவர்களுக்கு காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நன்றி தெரிவித்ததுடன், அவர்கள் கல்வி கற்கும் காத்தான்குடி அல்-ஹிரா மஹா வித்தியாலயத்திற்குச் சென்று பாராட்டு வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
“நேர்மையின் ஒளி பாயும் இளைஞர்கள் – சமூகத்திற்கு முன்னுதாரணம்”