காத்தான்குடி கடற்கரையில் – பசுமையான கடற்கரை பூங்கா அமைக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
காத்தான்குடி கடற்கரையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பசுமையான கடற்கரை பூங்கா அமைக்கும் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (01) புதன்கிழமை காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜூத் தலைமையில் இடம்பெற்றது.
“செழிப்பான நாட்டிற்கு அழகான கடற்கரை” எனும் தொனிப்பொருளின் கீழ், கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக நாடளாவிய ரீதியில் 100 பசுமையான கடற்கரை பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன. அதற்காக அரசாங்கம் 100 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது.
அதனடிப்படையில், காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் 1 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புதிய கடற்கரை பூங்கா அமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது கரையோரப் பேனல் மற்றும் கரையோர மூல முகாமைத்துவ திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது. தெரிவு செய்யப்பட்ட இடங்களில் கடற்கரைகளை பசுமையாக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் கே.எம். அப்துல்லாஹ், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், கரையோரப் பேனல் மற்றும் கரையோர மூல முகாமைத்துவ திணைக்களத்தின் பிராந்திய பொறியியலாளர் மு. துளசிதாசன், திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மீனவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
















