சட்டத்தரணி மீது தாக்குதல் – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது.!!!
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி ஒருவரை தாக்கி காயப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.
தகவலின்படி, சட்டத்தரணி ஒருவர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையை முடித்துவிட்டு, நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தியிருந்த தனது காரை இயக்க முற்பட்டுள்ளார்.
அந்தவேளையில் சிறைச்சாலை பஸ் ஒன்று நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தபோது, பஸ்ஸை நிறுத்துவதற்காக காரை அங்கிருந்து நகர்த்துமாறு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்குமிடையில் வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறின் போது, பொலிஸ் கான்ஸ்டபிள் சட்டத்தரணியை தாக்கி காயப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.