மட்டக்களப்பில் தொற்றா நோய்கள் குறித்து – விழிப்புணர்வு தெளிவூட்டல் நிகழ்வு.!!!
தொற்றா நோய்கள், தொற்று நோய்களை விட வேகமாக பரவி வரும் தற்போதைய சூழலில், அவற்றை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் “தொற்றா நோய் தெளிவூட்டல் நிகழ்வு” இன்று (11) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஆலோசனைக்கமைவாகவும், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் வழிகாட்டுதலிலும், நிர்வாக உத்தியோகத்தர் கே. மதிவண்ணன் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், தொற்றா நோய்களின் வகைகள், அவை உணவுப் பழக்கவழக்கங்களுடன் கொண்டுள்ள தொடர்பு, அவற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் வழிமுறைகள் மற்றும் மாத்திரை பயன்பாட்டில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்துப் பயனுள்ள விளக்கங்களை வழங்கினர்.
சின்னம்மைத் தொற்று நோய் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையிலும், தற்போது தொற்றா நோய்கள் 80% வீதமும், தொற்று நோய்கள் 20% வீதமுமாக மக்கள் வாழ்க்கையை பாதித்து வருகின்றன. சலரோகம், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் இருதய நோய்கள் போன்றவை மனித வாழ்விற்கு கடுமையான அச்சுறுத்தலாக விளங்குகின்றன.
வாரத்திற்கு குறைந்தது 180 நிமிடங்கள் கடின உடற்பயிற்சியில் ஈடுபடுவது அவசியம் எனவும், தொடர்ந்து 4 மணித்தியாலங்கள் அமர்ந்திருப்பது தொற்றா நோய்களின் முக்கிய காரணிகளில் ஒன்றாகும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், சீரான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பங்கேற்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்வில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ. உதயகுமார் மற்றும் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ரி. மணிமாறன் ஆகியோர் வளவாண்மை வழங்கினர். மாவட்ட செயலகத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.





