கைது செய்யப்பட்ட பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை.!!!
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (12) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு, நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான உத்தரவு இன்று பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இன்று காலை அவர் முன்னிலையாகியபோது, விசாரணை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டின்படி, சுற்றுலா அமைச்சின் கீழ் செயல்படும் நான்கு நிறுவனங்களின் ஊழியர்களுக்கான நேரடி மருத்துவக் காப்புறுதிக்காக, சட்டவிரோதமாக தனியார் தரகர் நிறுவனமொன்றை நியமித்ததன் மூலம், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு ரூ. 4,750,828.72 நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, முன்னாள் அமைச்சருக்கு எதிராக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



