காத்தான்குடியில் அதிகமான இரத்த கொடையாளர்கள் கலந்துகொண்ட – இரத்ததான நிகழ்வு.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கில், காத்தான்குடி தள வைத்தியசாலையுடன் இணைந்து காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் 17ஆவது தடவையாக ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (14) காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் பணிப்பாளர் தேசபந்து எம்.ஐ.எம்.ஹாரிஸ் தலைமையில் இடம்பெற்ற இவ் இரத்ததான முகாமில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
காத்தான்குடி தள வைத்யியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எஸ்.எம்.ஜாபிர் மற்றும் காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் நித்தியா நந்தனா, நகர சபை உறுப்பினர்கள், தாதியர்கள், அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், இரத்த கொடையாளர்கள் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
காத்தான்குடி தள வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் இரத்த தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் முகாமில் ஆண்கள்,பெண்கள் என சுமார் 100 க்கும் மேற்பட்ட இரத்த கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
















