வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணம் செலுத்தும் சேவை ஆரம்பம்.!!!
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க தலைமையில், இன்று (24) காலை வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணம் செலுத்தும் நவீன சேவை மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
சேவை அறிமுக நிகழ்வின் போது, பஸ் சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனரா என உறுதிப்படுத்த தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் மூலம் மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
அதற்கமைய இன்றைய தினம் மாகும்புர – மாத்தறை, மாகும்புர – காலி, மாகும்புர – பதுளை, கொழும்பு – அம்பாறை அதிவேக நெடுஞ்சாலைப் பாதைகளில் அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பிமல் ரத்னாயக்க கூறியதாவது: “மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை பொரளையிலிருந்து கடவத்தை வரையும், ஊவா மாகாண போக்குவரத்து அதிகாரசபை பதுளை – பண்டாரவளை, தம்புள்ளை – மஹியங்கனை, மொனராகலை – பிபிலை, மொனராகலை – வெல்லவாய ஆகியப் பாதைகளில் சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கும் இன்றே அட்டை கட்டண சேவை தொடங்கப்பட்டுள்ளது.
நாளை (25) கொழும்பு – வவுனியா, கடவத்தை – மகரகம, மாகும்புர – தங்காலை மற்றும் மாகும்புர – அங்குனுகொலபெலஸ்ஸ பாதைகளிலும் இந்த சேவை ஆரம்பிக்கப்படும்.” எனவும் தெரிவித்தார்.
தலங்கம – கொஸ்வத்தை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தலைவர் காமினி ஜயசிங்க கூறியதாவது: “வரும் டிசம்பர் மாதத்துக்குள் மேல் மாகாணத்தில் இயங்கும் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைப் பேருந்துகளிலும் அட்டை கட்டண முறையை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.
2026 ஆம் ஆண்டு நிறைவடையும் முன்னர், மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் வங்கி அட்டைகள் மூலம் பயணச்சீட்டைப் பெற்றுக்கொள்ளும் முழுமையான சேவை நடைமுறைக்கு வரும்.”
மேலும் அவர் தெரிவித்ததாவது: “இந்த மாத இறுதி மற்றும் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து அதிவேக நெடுஞ்சாலை பஸ்களிலும் சேவை அறிமுகமாகும்.
ஜனவரியில் மேல் மாகாண சொகுசு பேருந்துகளிலும், பின்னர் தெரிவுசெய்யப்பட்ட சாதாரண பேருந்துகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.
அடுத்த வருட முடிவில் மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளும் அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் முறைக்கு மாற்றப்படும்.” என்றார்.
















