மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு பரவல் தீவிரம் – 15 நாட்களில் 40 நோயாளர்கள் கண்டுபிடிப்பு.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பித்ததனைத் தொடர்ந்து டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக கடந்த 15 நாட்களுக்குள் மாவட்டத்தில் 40 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் அடிப்படையில், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகளவாக 10 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனதீவு பிரதேசத்தில் 5 பேரும், காத்தான்குடி மற்றும் செங்கலடி பிரதேசங்களில் தலா 4 பேரும், கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேசங்களில் தலா 3 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் களுவாஞ்சிக்குடி, கிரான், வாகரை, வெல்லாவெளி மற்றும் ஆரையம்பதி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா இருவர் வீதமும், ஏறாவூர் பிரதேசத்தில் ஒருவர் வீதமும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தமது வீட்டு சூழல் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டுமென மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் நேற்று காலை ஆரம்பிக்கப்பட்டன. மட்டக்களப்பு வாவிக்கரை பூங்கா முதல் மட்டக்களப்பு கல்லடி பாலம் வரை சுமார் மூன்று கிலோமீற்றர் நீளமான வடிகான்கள் மற்றும் வீதியோர பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டன.
இந்த சிரமதான பணிகளை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இணைந்து முன்னெடுத்தனர்.
இதன் ஆரம்ப நிகழ்வு, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன், மாநகரசபை ஆணையாளர் என். தனஞ்செயன், பிரதியாணையாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் லிங்கேஸ்வரன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். உதயகுமார், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சிரமதான பணிகளின் போது வடிகான்கள் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டதுடன், அவற்றுக்குள் கழிவு நீரை வெளியேற்றுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேவேளை, வீதியோரங்களில் நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவாக காணப்பட்ட இடங்களும் சுத்தம் செய்யப்பட்டன. வீதிகளில் குவிந்திருந்த பெருமளவான கழிவுப்பொருட்களும் மாநகரசபையினால் அகற்றப்பட்டன.

