பௌத்த உரிமையை கேள்விக்குறியாக்க வேண்டாம் – ஞானசார தேரர் எச்சரிக்கை.!!!
திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்படுதல் தொடர்பாக ஏற்பட்ட கலவரம் பின்னணியில், பல தேரர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவங்கள் பௌத்த மத உரிமையை கேள்விக்குறியாக்கும் செயல்களாகும் என்று ஞானசார தேரர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று (18) திருகோணமலையில் ஊடகங்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது:
இலங்கை என்பது புத்தருக்குச் சொந்தமான புனித பூமி; இந்தத் தீவில்தான் தமிழ், சிங்கள, முஸ்லீம் சமூகங்கள் இரண்டும் வாழ்ந்து வருகின்றன. பௌத்த மக்களின் உரிமை நிலைநிறுத்தப்பட்ட இந்த நிலத்தில் சிலர் கை வைப்பது ஏற்க முடியாதது.
பௌத்த வணக்கஸ்தலத்தை அமைக்க அரசாங்க அனுமதி பெற்றுள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
புத்தர் சிலையை அகற்றுமாறு கலவரம் ஏற்படுத்தியவர்களால் தாக்கப்பட்டபோது, பல தேரர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேரர்களை தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருவது மிகவும் வருந்தத்தக்கது என்றும் தேரர் கூறினார்.
5 வருடங்களுக்கே அரசாங்கத்தின் அதிகாரம்; ஆனால் பௌத்த மதத்தின் உரிமை 2,000 ஆண்டுகளாக இலங்கையில் நிலைத்து நிற்கிறது. அது ஒருபோதும் மாறாது என்றும் ஞானசார தேரர் வலியுறுத்தினார்.
மேலும், மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டும் செயல்களில் அரசாங்கமே ஈடுபட்டு வருகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார். விகாரைக்கு சொந்தமான இடத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை விகாராதிபதிக்கே உண்டு எனவும் அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற ‘பாவ செயல்கள்’ இனி இடம்பெறக்கூடாது என்று எச்சரித்த அவர், பௌத்த மதத்தின் பாதுகாப்பு குறித்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்துக் காட்டினார்.