சாரதி அனுமதிப்பத்திர அச்சிடுதல் மீண்டும் தொடக்கம் – தேங்கியிருந்த 3.5 இலட்சம் அனுமதிப்பத்திரங்களுக்கு தீர்வு.!!!
அச்சிடும் அட்டைகள் இல்லாத காரணத்தால் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் பணிகள் கடந்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அச்சிடும் அட்டைகள் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, தினமும் சுமார் 6,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் திறன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அட்டைகள் பற்றாக்குறையால் இதற்கு முன்பு சுமார் 3,50,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படாமல் தேங்கிக் கிடந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.
தேங்கியுள்ள அனுமதிப்பத்திரங்களை விரைவாக அச்சிட்டு வழங்குவதற்கான சிறப்பு திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்களுக்கு 14 நாட்களுக்குள் அனுமதிப்பத்திரங்களை வழங்கும் புதிய அமைப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்காக அனைத்து மாவட்ட அலுவலகங்களையும் இணையவழி முறையில் இணைக்கும் செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில மாவட்டங்கள் ஆன்லைன் இணைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது வெரஹெர தலைமை அலுவலகத்துடன் இணைந்து ஹம்பாந்தோட்டை மற்றும் அநுராதபுரம் மாவட்ட அலுவலகங்களிலும் சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் குருநாகல் மாவட்ட அலுவலகத்திலும் அச்சிடும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.