தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகளை விடுவிக்க முயற்சி – ஜனாதிபதிக்கு நேரடியாகத் தெளிவூட்ட தீர்மானம்.!!!
இலங்கை சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சவுதி அரேபியாவிலிருந்து அனுப்பப்பட்ட புனித குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகளை விடுவிப்பது தொடர்பான இறுதி முடிவை எட்டுவதற்கான முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று இரவு கொழும்பு தெஹிவளை ரோஸ்வூட் சிலோன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், அனைத்துக் கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் MP க்கள், உலமாக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், புத்திஜீவிகள், சட்டத்தரணிகள் ஆகிய பல முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர்.
சிரேஷ்ட சட்டத்தரணிகளான சிராஸ் நூர்தீன் மற்றும் ருஷ்தி ஹபீப் ஆகியோர், குர்ஆன் பிரதிகளை சட்ட ரீதியாக விடுவிக்கும் நடைமுறைகள் குறித்த விளக்கத்தை சபைக்கு வழங்கினர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட மூன்று தீர்மானங்கள் ஒருமித்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன: ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு
குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகளை விடுவிக்கும் அவசியம் மற்றும் உண்மையான நிலையை முழுமையாக விளக்கும் கடிதத்தை நேரடியாக ஒப்படைத்தல். இஸ்லாமிய புத்தகங்களை ஆய்வு செய்வதற்காக முன்பு அமைக்கப்பட்டு தற்போது அதிக சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள “மீளாய்வு குழுவை” முழுமையாக கலைக்க கோரிக்கை விடுத்தல். அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் (ACJU) உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை எழுத்து வடிவில் பெற்றுக் கொள்வது.
இதேவேளை, குர்ஆன் பிரதிகளை விடுவிக்க “மீளாய்வு குழு” முன்வைத்துள்ள 30 வசனங்களுக்கு விளக்கக் குறிப்புகளை இணைக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அந்த விளக்கக் குறிப்புகளை ACJU வழங்கும், அவற்றை குறித்த பிரதிகளில் இணைப்பதற்கான பொறுப்பை We Are One அமைப்பு ஏற்கும் என்று கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டம், நீண்டகாலமாக சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகளை விடுவிக்கும் முயற்சியில் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியது.


















