மூதூருக்கு முதற்கட்ட நிவாரணம்; காத்தான்குடியில் சேகரிக்கப்பட்ட உதவிப் பொருட்கள் – இராணுவத்திடம் ஒப்படைப்பு.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூதூர் மக்களுக்கு உதவியளிக்கும் நோக்கில், காத்தான்குடியில் சேகரிக்கப்பட்ட முதல் கட்ட நிவாரணப் பொருட்கள் இன்று (01) திங்கட்கிழமை இலங்கை இராணுவத்திடம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந்த நிவாரணப் பொருட்கள் 500 குடும்பங்களுக்கு, தலா ரூ. 5,000 மதிப்பிலான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் தேவையான உபகரணங்களை கொண்டுள்ளதாக, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.சீ.எம்.ஏ. சத்தார் தெரிவித்தார்.
இந்த நிவாரணப் பொருட்கள் சேகரிப்பில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா, காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி வர்த்தகர் சங்கம், அரசியல் பிரமுகர்கள், பொது நிறுவனங்கள், சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மக்கள் ஒத்துழைப்பால் உருவான பெரும் நிவாரண முயற்சியாக இது பாராட்டப்படுகிறது.
அதேபோல், காத்தான்குடியைச் சேர்ந்த கலீல் பாரி தலைமையிலான குழுவினரால் ஒருங்கிணைக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள், இன்று அதிகாலை இரண்டு லொறிகள் மூலமாக மூதூர் – கிண்ணியா பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிவாரணப் பொருட்கள் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் பாதுகாப்பாக திருகோணமலை நகரை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை விரைவாக வழங்கும் நடவடிக்கைகள் தற்போது இராணுவம் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.
இந்நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள், காத்தான்குடி நகரசபைத் தவிசாளர், பிரதேச செயலாளர், அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.



















