வெள்ளத்தில் சேதமடைந்த பேருந்துகள்: டிசம்பர் 31க்குள் சேவையில் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க.!!!
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து வசதிகளை விரைவில் மீட்டெடுக்க அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பேருந்து சேவைகளையும் மீண்டும் இயக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சிலாபம்-கொழும்பு ரயில் பாதை, இரணைவில பாலம், சிலாபம் போக்குவரத்து டிப்போ மற்றும் சிலாபம்-புத்தளம் ரயில் பாதையில் பத்துலு ஓயா பாலத்திற்கு அருகிலுள்ள சேதமடைந்த பகுதிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டார்.
சிலாபம் டிப்போவின் தினசரி செயல்பாட்டுக்கு 56 பேருந்துகள் தேவைப்படுகின்றன. இதில் 27 பேருந்துகள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதாக டிப்போ கண்காணிப்பாளர் விளக்கமளித்தார்.
சம்பள சிக்கல் தொடர்பில் அவர் கூறுகையில்,
“டிப்போ ஊழியர்களின் மாத சம்பளத்திற்கு ரூ. 9.3 மில்லியன் தேவைப்படுகிறது. சம்பளத்திற்காக சேமித்து வைத்திருந்த நிதி பாழடைந்த பேருந்துகளைப் பழுது பார்க்க பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இம்மாத சம்பளத்தை வழங்குவது சிரமமாகியுள்ளது” என தெரிவித்தார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியதாவது:
“இரணைவில பாலம் சேதமடைந்துள்ளது. அதற்கு பதிலாக ‘பெய்லி பாலம்’ எனப்படும் தற்காலிக இரும்பு பாலம் நிறுவப்படும். தேவையான பாகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குடவேவ ரயில் நிலையம் மற்றும் பத்துலு ஓயா அருகே பாதை சேதமடைந்தது. ரயில்வே ஊழியர்கள் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு பணிபுரிகின்றனர். இரண்டு மாதங்களுக்குள் சிலாபம்-கொழும்பு ரயிலை இயக்க முடியும். பின்னர் சிலாபம்-புத்தளம் பாதை சரிசெய்யப்படும்” என்றார்.
“பேருந்துகளை சேவையில் மீண்டும் ஈடுபடுத்த ஊழியர்கள் காட்டும் அர்ப்பணிப்பை அரசாங்கம் பாராட்டுகிறது. அத்தகைய பங்களிப்பினை மனதில் கொண்டு டிசம்பர் 31க்கு முன்னர் அனைத்து பேருந்துகளும் மீண்டும் சேவையில் ஈடுபடும்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜனக மற்றும் அஜித் கிஹான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


