ஒருவாரம் செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு.!!!
இலங்கை அரச கிளவுட் சேவையில் ஏற்பட்டிருந்த தொழிநுட்ப சிக்கல் தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது.
இதனிடையே, குறித்த கோளாறு காரணமாக முடங்கியிருந்த அனைத்து அரச இணைய சேவைகளும் இன்று (21) முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும், பொதுமக்கள் அவற்றை வழமைபோல் பயன்படுத்த முடியும் என்றும் ICTA பேச்சாளர் தெரிவித்தார்.
‘இலங்கை அரச கிளவுட்’ சேவையில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக பல அரச நிறுவனங்களின் இணைய சேவைகள் கடந்த ஒருவார காலமாக செயலிழந்திருந்தன.
சுமார் 34 அரச நிறுவனங்களின் சேவைகள் இவ்வாறு ஒரு வாரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டிருந்ததாக ICTA குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சேவைகளில் பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (BMD) சான்றிதழ் வழங்கும் அமைப்பு, மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (மேல் மாகாணம் தவிர) இணையவழி வருமான வரி அமைப்பு (eRL 2.0), பொலிஸ் திணைக்களத்தின் அனுமதிச் சான்றிதழ் வழங்கும் அமைப்பு, வணிகத் திணைக்களத்தின் உற்பத்தி சான்றிதழ் வழங்கும் முறை, ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வூதிய அமைப்பு, வளிமண்டலவியல் திணைக்களம், நிறுவனப் பதிவாளர் திணைக்களம் மற்றும் இலங்கையின் கணக்கியல் மற்றும் கணக்காய்வு தரநிலைகள் சபை உள்ளிட்ட பல இணைய சேவைகள் அடங்கும்.
ICTA தெரிவித்ததாவது, “அனைத்து தொழிநுட்ப குழுக்களும் இணைந்து விரைவான நடவடிக்கைகளை எடுத்ததன் பலனாக இச்சிக்கல் முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற இடையூறுகள் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” எனவும் கூறியுள்ளது.