மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை – மரங்கள் முறிந்து வீதிகள் முடக்கம்.!!!
மட்டக்களப்பில் நேற்று தொடக்கம் பெய்துவரும் கனமழையும் அதனுடன் இணைந்த பலத்த காற்றும் காரணமாக மாவட்டம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று (26) அதிகாலை முதல் பெய்த இடைவிடாத பலத்த காற்றுடனான மழையால், மட்டக்களப்பு நகரின் பார் வீதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்து, வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் மின்விநியோகமும் பாதிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, மரத்தை வெட்டி அகற்றியதோடு, மின்சார சபை பொறுப்பதிகாரிகள் மின் இணைப்புகளையும் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், கல்லடி பகுதியில் மரங்கள் முறிந்து வீதியை மறித்ததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இருதயபுரம், கருவேப்பங்கேணி, மாமாங்கம், கூழாவடி, புதூர், சேத்துக்குடா, கல்லடி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி காணப்படுவதோடு, சில வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதால் குடியிருப்போர் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

