கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை.!!!
(எம்.ஐ.எம். கமால்தீன்)
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (15) காலை 6.30 மணிக்கு வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின் படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை அல்லது அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துளளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பகுதிகளில் அதிகபட்சம் 100 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் 75 மில்லிமீட்டருக்கு மேல் பலத்த மழை பதிவாகும் வாய்ப்பு உள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில், திடீரென அதிகரிக்கும் பலத்த காற்று, மின்னல் தாக்கம், மரங்கள் விழுதல் போன்ற ஆபத்துகள் ஏற்படக்கூடியதால், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் மழை அதிகரிக்கும் சூழலில் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று வானிலை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.



