“தான் தவறேதும் செய்யவில்லை; யார் வேண்டுமானாலும் விசாரிக்கலாம்” – அமைச்சர் பிமல் ரத்நாயக்க.!!!
(கொழும்பு செய்தியாளர்)
அமைச்சரவை மாற்றத்தையடுத்து, துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சுப் பொறுப்பு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடமிருந்து அனுர கருணாதிலகவுக்கு மாற்றப்பட்டதையடுத்து, இது குறித்த பல்வேறு அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எதிர்க்கட்சிகள், “அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தவறான செயற்பாடுகளே காரணம்; அதனால் அவரிடமிருந்து அமைச்சுப் பொறுப்பு பறிக்கப்பட்டது” என குற்றஞ்சாட்டியிருந்தனர்.
ஆயினும், இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, “நான் தவறேதும் செய்யவில்லை. யாருக்கு சந்தேகம் இருந்தாலும் விசாரணைக்குச் சென்று அவற்றை நிருபிக்க முடியும்,” என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையிலும், பிமல் ரத்நாயக்கவின் பொறுப்புகள் பறிக்கப்படவில்லை; மாறாக அரசாங்கத்தின் இலக்குகளை மேலும் திறம்பட அடைய வகையில் பொறுப்புகள் மறுசீரமைக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிமல் மேலும் கூறியதாவது:
“ஜனாதிபதி என்னை நம்புகிறார்; அவரின் நம்பிக்கையில்தான் நான் செயற்படுகிறேன். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் என்னை பாதிக்காது,” என்றார்.
இலங்கை அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சைக்கு இடம் கொடுத்த அமைச்சரவை மாற்றம் குறித்து தொடர்ந்து விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.