குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் யாழ்.பிராந்திய அலுவலகம்; ஜனாதிபதியால் திறந்து வைப்பு.!!!
யாழ்ப்பாண மக்களின் நீண்டகால குறைபாட்டைப் பூர்த்தி செய்யும் வகையில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (01) முற்பகல் திறந்து வைத்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய அரசாங்கத்தின் முன்னுரிமைத் திட்டமாக டிஜிட்டல் மயமாக்கல் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டுக்குள், பொதுமக்கள் அரசாங்கத்துடனான அனைத்து பணக்கொடுக்கல் வாங்கல்களையும் இணையவழியில் (Online) மேற்கொள்ளும் வசதியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இங்கு குறிப்பிட்டார்.
இவ்வளவு காலமும் கொழும்பிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் தொலைதூர கிராமங்களுக்கு பரவலாக்கப்பட்டு, அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளை, நெருக்கமாக முன்னெடுப்பதற்கு மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி இங்கு மேலும் குறிப்பிட்டார்.






