காத்தான்குடியில் டெலன் சமூக சேவை அமைப்பின் — 1000 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டம் அங்குரார்ப்பணம்.!!!
(றுஸ்த் நெளபர்)
காத்தான்குடி டெலன் சமூக சேவை அமைப்பின் முன்னெடுப்பில், நாடளாவிய ரீதியில் விசேட தேவையுடைய மற்றும் பொருளாதார தட்டுப்பாட்டில் உள்ள 1000 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம் நேற்று (19) சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு, அமைப்பின் நிறுவனர் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். சஜீ அவர்களின் தலைமையில், காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவை பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சீ. நஜிமுதீன் அவர்களின் வழிகாட்டுதலிலும், பிரதேச செயலாளர் நிஹாரா மவ்ஜூத் அவர்களின் பங்கேற்புடனும் நிகழ்ச்சி இடம்பெற்றது.
நிகழ்வில் 167ஏ கிராம சேகவர் நஜீமா ஜறூப், மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், நிதி உதவியாளர்கள் மற்றும் டெலன் சமூக சேவை அமைப்பின் பல உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
திட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான கற்றல் உபகரணங்களுக்கான பணக் கூப்பன்கள் வழங்கப்பட்டதுடன், விசேட தேவையுடையவர்களுக்கு மருத்துவ உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













