நாட்டின் சில மாவட்டங்களில்; இடைவிடாது பலத்த மழை பெய்யும் சாத்தியம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை.!!!
நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றையதினம் (24) இடைவிடாது மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் இரண்டு மணி முதல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாயம் காணப்படுகின்றது.
கடல் பகுதிகளில் புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, பொத்துவில் மற்றும் சிலாபம், மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை வரையிலான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். சில இடங்களில் மணித்தியாலத்துக்கு 55 – 60 கிலோ மீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.
மேலும் காலி முதல் மாத்தறை, அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழலாம். இதனால் கரையோரங்களை அலை அடையும் அபாயம் அதிகரிக்கக்கூடும்.
இதனால் கடலில் பயணம் செய்பவர்கள் மற்றும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
