உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு; காத்தான்குடியில் நடமாடும் சேவை.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
வளமான நாடும் – அழகான வாழ்க்கையும் எனும் தொனிப்பொருளின் கீழ் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து நாளை திங்கட்கிழமை (15) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) வரை அனுஷ்டிக்கப்படவுள்ள, உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் விஷேட நடமாடும் சேவையானது நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நடமாடும் சேவைக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஸட்.ஏ.எம். பைசல் கலந்து கொள்ளவுள்ளதோடு, கெளரவ அதிதிகளாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜூத், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் றிப்கா ஷபீன், காத்தான்குடி நகர சபையின் பிரதி நகர முதல்வர் எம் ஐ எம் ஜெஸீம் உட்பட நகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் காலை 08.30 மணி முதல் இடம்பெறவுள்ள இந்த நடமாடும் சேவையில் பொதுமக்கள் பின்வரும் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
●பொதுமக்கள் முறைப்பாடுகள், கோரிக்கைகள் கையேற்றல்.
●கட்டட விண்ணப்பங்களை கையேற்றல்.
●ஆதனவரி செலுத்துதல், ஆதனவரி பெயர் மாற்றம் செய்தல்.
●நடப்பாண்டுக்குரிய வரிகளுக்கான விஷேட சலுகை.
●மின்விளக்கு கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு வழங்கல்.
●வீதி சிதைவுகள் சீர்செய்தல் வீதி துப்பரவு, வடிகான் துப்பரவு.
●பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் பொதுமக்கள் சேவைகள் முகாம்.
●ஆதார வைத்தியசாலையினால் வழங்கப்படும் வைத்திய முகாம்.
●இலவச கண் பரிசோதனை முகாம்.
●தாய்சேய் நலன் மருத்துவ முகாம்.
●இலவச பல் வைத்திய முகாம்.
●ஆரோக்கிய உணவு முகாம்.
●கால்நடை வைத்திய முகாம்.
●நீர் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் சேவைகள் முகாம்.
●ஆயுர்வேத வைத்திய முகாம்.
போன்ற நகர சபையுடன் தொடர்புடைய இன்னும் பல சேவைகள் இடம்பெறவுள்ளதுடன், அவற்றுக்கான உடனடித் தீர்வுகளும் அன்றைய தினமே பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்தார்.
எனவே இந்த நடமாடும் சேவையினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு பொதுமக்களைக் கேட்டுள்ளார்.
இதேவேளை உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு, காத்தான்குடி பிரதேசத்தில், நாளை முதல் (15 ) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21 ) வரை முறையே, நடமாடும் சேவை, சுற்றாடல் மற்றும் மரநடுகை, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், வருமானம் மற்றும் மேம்பாடு, இலக்கியம் கல்வி மற்றும் நூலக மேம்பாடு, பொதுமக்கள் பயன்பாடு மற்றும் விளையாட்டு அத்துடன் இறுதி நிகழ்வாக சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.