மட்டக்களப்பில் சுற்றுலாத்துறையை முன்னேற்றும் நோக்கில் – புதிய உப குழு அங்குரார்ப்பணம்.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட ரீதியிலான சுற்றுலா துறைசார் உப குழு ஒன்றை அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (28) மட்டக்களப்பில் இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளுக்குமான அபிவிருத்திக் குழு தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
தற்போதைய அரசாங்கத்தினால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு உப குழுவை அமைப்பது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வாகரை, ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிகுடி, வவுணதீவு உள்ளிட்ட பிரதேச செயலக பிரிவுகளில் நடைமுறையில் உள்ள சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், அவற்றில் நிலவும் தாமதங்கள் மற்றும் அவற்றை சரி செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
இதனுடன், சில திட்டங்களை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல்களை தவிர்க்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பல முக்கிய ஆலோசனைகளையும் முன்வைத்தார்.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சனி ஸ்ரீகாந்த், விவசாய, கால்நடை, காணி, நீர்ப்பாசனம் திணைக்களங்களுக்கான மாவட்ட இணைப்பாளர் கே. திலகநாதன், சுற்றுலாத் துறை அமைச்சிற்கான மாவட்ட இணைப்பாளர் வணிதா செல்லப்பெருமாள், தேசிய மக்கள் சக்தி கட்சியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், மாவட்ட செயலக உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.











