இலங்கையில் மின்சாரக் கட்டண உயர்விற்கு; திறனற்ற வீட்டு உபகரணங்களே காரணம் – வலு அதிகாரசபை அறிவிப்பு.!!!
நாட்டில் அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணங்களுக்கு, திறனற்ற வீட்டு உபகரணங்களே முக்கிய காரணம் என இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை எச்சரித்துள்ளது.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே, அதன் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ விக்ரமசிங்க இதனை உறுதிப்படுத்தினார்.
10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதன பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகள் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துவதாக ஆய்வுகள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், மேல் மாகாணத்தில் மட்டுமே, மூன்றில் ஒரு பகுதி குளிர்சாதனப் பெட்டிகள் பயன்படுத்துவதற்கு பொருத்தமற்ற நிலையில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் விளைவாக, மாதந்தோறும் கூடுதலாக 100 யூனிட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது எனவும் கூறினார்.
அதேநேரத்தில், குறைந்த செயற்திறன் கொண்ட சாதனங்களின் இறக்குமதியை அரசாங்கம் ஏற்கனவே கட்டுப்படுத்தியுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் குளிரூட்டிகள் தொடர்பான சட்டத்தை கடுமையாக்கும் எனவும் ஹர்ஷ விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.