ஈரானியக் கப்பல் ‘IRIS Bushehr’: இயந்திரக் கோளாறு காரணமாக கொழும்பு கடற்பரப்பில் நங்கூரம்.!!!
இலங்கை கடற்பரப்பில் இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகிய ஈரானியக் கப்பல் தொடர்பான புதிய தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (19) நாடாளுமன்றத்தில் பகிர்ந்துள்ளார்.
ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr என்ற கப்பல் திட்டமிட்டபடி திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட முடியாமல் இருப்பதாகவும், தற்போது கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட பாரிய கோளாறு காரணமாக, திருகோணமலை துறைமுகத்துக்கு இழுத்துச் செல்லும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கோளாறைச் சரிசெய்வதற்காக தனியார் நிறுவனம் ஒன்றின் தொழில்நுட்ப உதவி கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
தனியார் நிறுவனத்தின் மூலம் திருத்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், கப்பல் பாதுகாப்பாக திருகோணமலை துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற சூழலுக்கிடையில், இலங்கைக் கடற்பரப்பிற்குள் வந்துள்ள இந்த ஈரானியக் கப்பல் தொடர்பான பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப விபரங்கள் நாடாளுமன்றத்தில் அதிக கவனத்துடன் பரிசீலிக்கப்படுகின்றன.