சீரற்ற காலநிலை பேரிடர் – உயிரிழப்புகள் 618 ஆக உயர்வு
2.07 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு.!!!
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இன்று இரவு 8.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில், 209 பேர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலையால் நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 580,030 குடும்பங்களைச் சேர்ந்த 2,078,436 நபர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 29,874 குடும்பங்களைச் சேர்ந்த 100,124 பேர், 990 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அவசர நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பேரிடரால் 4,071 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 71,121 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வீடுகள், சாலைகள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
