அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ஜப்பானின் தொடர்ந்த ஆதரவு.!!!
● 27 பேர் கொண்ட ஜப்பான் அனர்த்த நிவாரண மருத்துவக் குழு இலங்கை வருகை.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ஜப்பான் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவின் அடையாளமாக, 27 உறுப்பினர்களைக் கொண்ட மற்றொரு ஜப்பான் அனர்த்த நிவாரண (JDR) மருத்துவக் குழு நேற்று இலங்கை வந்தது.
இக் குழுவில் வைத்தியர்கள், மருத்துவ நிபுணர்கள், நிவாரண அதிகாரிகள் மற்றும் மீட்பு நிபுணர்கள் அடங்குகின்றனர். தேசிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, தரை மட்டத்தில் அத்தியாவசிய மருத்துவ உதவிகளை வழங்குவதோடு, அனர்த்த நிலைமையால் சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கமும் கொண்டுள்ளது.
குழுவின் தலைவர் கிச்சிரோ இவாஸெ தலைமையிலான இக்குழுவை, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கிழக்கு ஆசியா மற்றும் ஓசனியா பிரிவின் பணிப்பாளர் நாயகம் சாவித்ரி பானபோக்கே, அத்துடன் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோர் உத்தியோகபூர்வமாக வரவேற்றனர்.
இலங்கைக்கான ஜப்பான் தூதவர் இசோமாடா அகியோவும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.
ஏற்கனவே 04 பேர் கொண்ட ஜப்பான் மருத்துவக் குழு இலங்கைக்கு வந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக இம்முறை 27 பேர் வருகை புரிந்துள்ள நிலையில், மொத்தம் 31 பேர் கொண்ட ஜப்பான் மருத்துவக் குழு தற்போது நாட்டில் மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.



