சட்டம் ஒழுங்கின் அடித்தளம் – சமூகத்தின் பாதுகாப்பு.!!!
சட்டம் என்பது யாவருக்கும் பொதுவான ஒன்று. ஆட்சியாளனாக இருந்தாலென்ன அல்லது பொது மகனாக இருந்தாலென்ன எவராக இருந்தாலும் சட்டத்தை மதித்து நடப்பது ஒவ்வொரு குடிமகனினதும் தலையாய கடமையும், பொறுப்புமாகும்.
நாட்டின் சகலதுறைகளும் சட்டத்தின்படியே இயங்குகின்றது என்றால் மிகையாகாது. படித்தவனில் தொட்டு பாமர மக்கள் வரை சட்டம் ஏன்? எதற்காக?? உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பதனை ஆழமாக அறிந்தும், தெரிந்தும் வைத்திருக்கின்றார்கள்.
சட்டமானது நாட்டுப் பிரஜைகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒன்று. அவற்றை உரியமுறையில் ஒவ்வொரு குடிமகனும் கடைப்பிடிக்கின்றபோது அல்லது அதனை உரியமுறையில் நடைமுறைப்படுத்துகின்றபோது நாடு சீராகவும், செழிப்பாகவும் இயங்கும். அத்தோடு ஏற்படுகின்ற இழப்புக்கள், பாதிப்புக்கள், ஆபத்துக்களை அதிகமதிகம் குறைத்துக்கொள்ளவும் முடியும்.
இன்றைய மக்களின் அவசர நகர்வும், வாழ்வியலும், நாகரீக வளர்ச்சியும் மக்களை வேகமாக ஒன்றன்பின் ஒன்றாக நகர்த்திக்கொண்டே செல்கிறது எனலாம். இத்தகைய வளர்ச்சிப்போக்கினால் நவீனம் தலைக்கேறி, ஏதோ ஒன்றுக்குள் மனிதன் சிக்கி அடிமையாகிப் போகின்ற நிலை உருவாகியுள்ளது. இந்த அசூரவளர்ச்சியும், முன்னேற்றமும் மனிதனை அழிவிற்கே கொண்டு செல்வதை அவதானிக்க முடிகின்றது.
வாகனங்களை ஓட்டுகின்ற வாகன சாரதிகள் சட்டவிதிகளை உரியமுறையில் பின்பற்றாமையும், அதீத போதைப் பாவனையும், போட்டித்தன்மையும், மிதமிஞ்சிய வேகமும் விபத்துக்கள் இடம்பெற காரணமாக அமைகின்றது.
இதேபோல இளசுகளில் தொடங்கி மூத்தோர் வரையில் தலைக்கவசம் இல்லாமல் வீதியில் பயணிப்பதும், வேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்துவதும், வீதி சட்ட ஒழுங்குகள், நடைமுறைகளை பேணாமல் வாகனங்களை செலுத்துவதாலும் அதீத மரணங்களும், விபத்துக்களும் ஏற்பட காரணியாக அமைந்துவிடுகின்றது.
வாகன ஓட்டிகள் தங்களுக்குப் பின்னால் இருக்கின்ற பயணிகளை நிச்சயமாக நினைத்துப்பார்க்க வேண்டிய தேவையுள்ளது. தன் நலனை விடவும் வாகனத்தில் பயணிக்கின்ற பயணிகளின் நலனில் அதீத அக்கறை செலுத்த வேண்டிய தேவைப்பாடு சாரதிகளுக்கு அதிகமதிகம் உண்டு. தன்னை நம்பி வருகின்ற பயணிகளை பாதுகாப்பாக கொண்டுபோய் சேர்க்க வேண்டியது சாரதியின் தலையாய கடமையும், பொறுப்புமாகும்.
இதைதவிர சாரதிகள் அதிகமான அல்லது எல்லையற்ற பயணிகளை ஏற்றுவதும், வேகமாக வாகனங்களை செலுத்துவதும், அழைபேசியை காதில் வைத்து பேசிக்கொண்டு வாகனத்தை செலுத்துவதும், ஓய்வின்றி தன் வருமானத்திற்காக வாகனங்களை செலுத்துவதும் பெரும் விபரீதங்களை ஏற்படுத்தி விடுகின்றது.
இதேபோல்தான் மோட்டார் வாகனத்தை செலுத்துகின்ற சாரதிகள் உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி மோட்டார் சைக்கிளை வீதிக்கு கொண்டுவருவதும், உரிய சட்டவிதிகளை கடைப்பிடிக்காமல் வீதியால் பயணிப்பதும், தலைக்கவசத்தை பொடுபோக்காக விட்டுவிடுவதும், அதிவேகமாக மோட்டார் வாகனத்தை செலுத்துவதும், வீதி சமிஞ்ஞைகளுக்கு கட்டுப்படாமையையும் அதீத விபத்துக்கள் நடந்தேற வாய்ப்பாக அமைகின்றது.
என்னதான் சட்டங்களும், சட்ட ஏற்பாடுகளும் இருந்தாலும் சட்ட விதிகளை உரியமுறையில் பின்பற்றாத வரை விபத்துக்களும், உயிர் இழப்புக்களும் அதிகரித்து கொண்டேதான் இருக்கும். ஒரு மனிதனின் உயிர் என்பது மிகவும் பெறுமதியானது. ஒருவரின் இழப்பு என்பது பெருமளவிலான பாதிப்புக்களை குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் ஏற்படுத்தி விடும். ஆகையால் வாகன ஓட்டிகளுக்கு அவதானம் என்பது அத்தியவசியமாகின்றது. எனவே சட்டத்தை நேசிக்கின்ற, பின்பற்றுகின்ற, மதிக்கின்ற நாட்டுப் பிரஜைகளை சமூக மட்டத்திலிருந்து உருவாக்க வேண்டியது சமூகத்திற்கான பெரும் பொறுப்பும், கடமையும் ஆகும்.
-எம்.ரி.எம்-