“மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” – தேசிய வாசிப்பு மாத இறுதிநாள் விழா காத்தான்குடியில் சிறப்பாக நிறைவு.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் ஆலோசனைச் சுற்றறிக்கையின்படி, காத்தான்குடி நகரசபை பொது நூலகம் முன்னெடுத்த தேசிய வாசிப்பு மாதம் – 2025 இன் இறுதிநாள் நிகழ்வு இன்று (06) வியாழக்கிழமை, ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில், காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.சிறப்பாக நடைபெற்றது.
பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்புச் செயலாளர் யூ.கே. அப்துல்லாஹ் மற்றும் காத்தான்குடி நகரசபையின் பிரதி நகர முதல்வர் எம்.ஐ.எம். ஜெஸீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கௌரவ அதிதிகளாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் அல்ஹாபிழ் எஸ்.எச்.எம். ரமீஸ் ஜமாலி, காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ. அப்துல் கபூர் மதனி, காத்தான்குடி நகரசபை செயலாளர் திருமதி ரினோஸா முப்லிஹ், நகரசபை கணக்காளர் எம்.பி.எம். இத்ரீஸ் உள்ளிட்ட நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தமது கலைநிகழ்வுகளை அரங்கேற்றினர்.
அதேவேளை, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் வாழ்நாள் சாதனையாளர் கௌரவம், நடுவர்களுக்கான கௌரவம், மற்றும் காத்தான்குடியில் சமூக சேவை செய்து வருகின்ற சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்திற்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.
காத்தான்குடி நகரசபை பொது நூலகத்தினால் 2025 அக்டோபர் 01 முதல் நவம்பர் 05 வரை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகள் வழியாக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சி சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

























