உள்ளூராட்சி வார “மறுமலர்ச்சி நகரம்” தேசிய வேலைத்திட்டம்; காத்தான்குடி நகரசபையில் ஆரம்பம்.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் வளமான நாடும் – அழகான வாழ்க்கையும் எனும் தொனிப்பொருளின் கீழ் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து இன்று திங்கட்கிழமை (15) விஷேட நடமாடும் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.
இந் நடமாடும் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்விம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்பழ்ழாஹ் கலந்து கொண்டார்.
கெளரவ அதிதிகளாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜூத், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் றிப்கா ஷபீன், காத்தான்குடி நகர சபையின் பிரதி நகர முதல்வர் எம்.ஐ.எம் ஜெஸீம் உட்பட அரச நிறுவனங்களின் அதிகாரிகள், நகர சபை உறுப்பினர்கள், ஊர்ப் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நடமாடும் சேவையில் நகர சபையுடன் தொடர்புடைய பல சேவைகள் இடம்பெற்றதோடு, அவற்றுக்கான உடனடித் தீர்வுகளும் அன்றைய தினமே பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு, காத்தான்குடி பிரதேசத்தில், இன்று முதல் (15 ) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21 ) வரை முறையே, நடமாடும் சேவை, சுற்றாடல் மற்றும் மரநடுகை, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், வருமானம் மற்றும் மேம்பாடு, இலக்கியம் கல்வி மற்றும் நூலக மேம்பாடு, பொதுமக்கள் பயன்பாடு மற்றும் விளையாட்டு அத்துடன் இறுதி நாள் நிகழ்வாக சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





















