காத்தான்குடி உலமாக்களுக்கான – நவீன திறன் மேம்பாட்டு செயலமர்வு வெற்றிகரமாக நிறைவு.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 30 உலமாக்களுக்கான ஒரு நாள் திறன் மேம்பாட்டு செயலமர்வு நேற்று (22) மட்டக்களப்பு சர்வோதய நிலையத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
பள்ளிவாயல் இமாம்கள், மத்ரஸா விரிவுரையாளர்கள் மற்றும் வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கம் நிகழ்த்தும் கதீப்மார்கள் ஆகியோரின் பேச்சுத் திறனை, இளைய தலைமுறையுடன் உரையாடும் ஆற்றலை மற்றும் சமூகத்தின் நவீன சவால்களை எதிர்கொள்ளும் திறனைக் காலத்திற்கேற்ற வகையில் மேம்படுத்துவதே இச்செயலமர்வின் முதன்மை நோக்கமாகும்.
காத்தான்குடி தள வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் டாக்டர் எம்.எஸ்.எம். நுஸைர் அவர்கள், “அல்ஃபா தலைமுறை” குறித்து ஆழமான விளக்கங்களையும், அவர்களோடு உரையாட வேண்டிய உத்திகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற குழுக் கலந்துரையாடல்களில், இளம் தலைமுறையினர் எதிர்நோக்கும் நவீன சவால்கள் அடையாளம் காணப்பட்டு, அதற்கான தீர்வுகள் உலமாக்களினால் முன்வைக்கப்பட்டன.
அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். நுஸ்ரி (நளீமி) அவர்களால், “21ம் நூற்றாண்டுக்கான தஃவா வழிமுறைகளை ஸீராவினூடாகப் புரிதல்” என்ற தலைப்பில் உயிரோட்டமான விரிவுரை வழங்கப்பட்டது.
உலகின் முன்னோடிப் பள்ளிவாசல்களின் காணொளிகள் மற்றும் காட்சிகள் மூலம், இளைஞர் சமூகத்திற்கான ஆன்மீக சூழலை உருவாக்கும் நவீன வழிமுறைகளும் ஆராயப்பட்டன.
விடிவெள்ளி வாரப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ், “ஊடகத்தை முறையாகக் கையாளுதல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஊடான தஃவா அணுகுமுறைகள்” என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார்.
இதில் சமூக ஊடக தஃவா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன.
இதனால் உலமாக்கள் இளைஞர்களுடன் தொடர்பு கொள்ளும் புதுமையான உரையாடல் முறைகளைப் பயன்படுத்துவார்கள் எனவும் ஆன்மீக மற்றும் கல்வி நிகழ்வுகளின் போது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சமூக ஊடக தஃவா செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
செயலமர்வின் நிறைவில், உலமாக்கள் ஆற்றவுள்ள எதிர்கால செயற்பாடுகளை உள்ளடக்கிய செயற்திட்ட முன்மொழிவு ஒன்று வடிவமைக்கப்பட்டதோடு, எல்லா பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் குழுச் செயற்பாடுகள், போட்டி நிகழ்ச்சிகள், விளையாட்டுச் செயற்பாடுகள் இடம்பெற்றமை செயலமர்வை மேலும் பயனுள்ளதாக்கின.
ஊடகப் பிரிவு –
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, காத்தான்குடி கிளை.
























