நாட்டில் இடம்பறும் பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு பிரதான காரணம் வேலைவாய்ப்பின்மையே; ருமேனியாவுக்கான தொழில் வாய்ப்பு இதற்கான நிவாரணமாகும்.!!!
மட்டக்களப்பு மாநகர மேயர் கருத்து
(ஜே.கே)
நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்திருக்கின்றன. இதற்கான பிரதான காரணம் இளைஞர் யுவதிகளிடையே நிலவும் வேலை வாய்ப்பின்மையேயாகும். ருமேனியா நாட்டிற்கான வேலை வாய்ப்பு இதற்கான நிவாரணமாகும். இவ்வாறு மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.
இலங்கை வேலைவய்ப்பு பணியகத்தின் வழிகாட்டலில் அம்ரோன் குழுமத்தின் அனுசரணையுடன் ருமேனியா நாட்டுக்கான வேலை வாய்ப்பு பெற்றுச்செல்லும் இளைஞர் யுவதிகளுக்கான நேர்முகத் தேர்வு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ருமேனியா நாட்டுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் இந்நேர்முகத் தேர்வில் பங்கு கொண்டிருந்தனர்.
ருமேனியா நாட்டிலிருந்து வருகை தந்த திருமதி ருவானா மற்றும் ருமேனிய நாட்டைச் சேர்ந்த பிரதீப் ஆகியோர் நேர்முகத் தேர்வினை நடத்தினர். அப்ரோன் குழுமத்தின் தலைவர் சிவலிங்கம் தினேஷ் குமார் தலைமையில் இன்று நிகழ்வு இடம்பெற்றது.
நேர்முகத் தேர்வில் தெரிவாகும் தெரிவாளர்கள் சுமார் எட்டு மாத கால எல்லைக்குள் ருமேனியா நாட்டுக்கு செல்ல முடியும் என அதன் தலைவர் இங்கு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய மட்டக்களப்பு மாநகர மேயர் தொழில் வாய்ப்பின்மை என்பது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. கல்வித்தகைமை உடையவர்களும் தகைமை இல்லாதவர்களுமென பெருமளவிலான இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பின்றி பெரும் அவலங்களை சுமந்து வருகின்றனர்.
அவ்வாறு வேலைவாய்ப்பு தேடுகின்ற இளைஞர் யுவதிகளுக்கு இந்த ருமேனியா தொழில் வாய்ப்பு பெரும் வரப்பிரசாதமாகும். ருமேனியா நாட்டிலிருந்து நேரடியாக மட்டக்களப்புக்கு வருகை தந்து இந்த நேர்முகத் தேர்வை நடத்துகின்ற ரூமேனியா நாட்டு பிரதிநிதிகளை மாநகர மேயர் என்கின்ற அடிப்படையில் அன்போடு வரவேற்கின்றேன்.
வேலைவாய்ப்பு பெற்று தருவதாக ஏமாற்றுகின்ற பல நிறுவனங்களுக்கு மத்தியில் இவ்வாறு நேரடியாக குறிப்பிட்ட நாட்டிலிருந்து வருகை தந்து தொழில் வாய்ப்புக்காக இளைஞர் யுவதிகளை தெரிவு செய்வது உண்மையிலேயே வரவேற்கத்தக்கதாகும் என்றார் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர பிரதி மேயர் எஸ் தினேஷ்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்
பெரும் எண்ணிக்கையிலான இளைஞர் யுதிகள் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலிருந்தும் மிகவும் ஆர்வத்துடன் நேர்முக தேர்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.