மட்டக்களப்பில் புதிய அரச ஒசுசல திறந்து வைப்பு – மக்களுக்கு தரமான மருந்துகள் நியாயமான விலையில்.!!!
மட்டக்களப்பு நகரில் அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் (SPC) புதிய அரச ஒசுசல கிளை இன்று (31) திறந்து வைக்கப்பட்டது.
திருமலை வீதி, மட்டக்களப்பு பகுதியில் அமைந்துள்ள இக்கிளை, அரசாங்க ஒசுசல வலையமைப்பின் 67ஆம் கிளையாகும்.
மக்களுக்கு தரமான மருந்துகளை நியாயமான விலையில் வழங்கும் நோக்கத்துடன் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டுதலின் கீழ் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்நவீன ஒசுசல் கிளையில் அனுபவம் மிக்க மருந்தாளர்களின் சேவை, தரமான மற்றும் உத்தரவாதமிக்க மருந்துகள் வழங்கப்படும். மேலும், மூத்த குடிமக்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகள் மற்றும் முப்படை வீரர்களுக்கான விருசர அட்டைதாரர்கள் ஆகியோருக்கு 5% விசேட விலை கழிவும் வழங்கப்படுகிறது.
மருந்துகள் அனைத்தும் SPC-யின் தரமான ஆய்வு கூடங்களில் நான்கு கட்டங்களில் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே சந்தைக்கு அனுப்பப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் மக்கள் நம்பிக்கையுடன் தரமான மருந்துகளைப் பெறும் வாய்ப்பு கிடைக்கிறது.
1971 ஆம் ஆண்டு பேராசிரியர் சேனக பிபிலே அவர்களால் நிறுவப்பட்ட அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், கடந்த 54 ஆண்டுகளாக இலங்கையிலுள்ள மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை வழங்கி வருகிறது.
இந்நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், மாநகர மேயர் சிவம் பாக்கியநாதன், பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன், மாநகர ஆணையாளர் என். தனஞ்ஜெயன், கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள், வைத்தியர்கள், அரச அதிகாரிகள், மக்கள் வங்கி ஓய்வூதிய சங்க உறுப்பினர்கள், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மனூஜ் சி. வீரசிங்க, முகாமைத்துவ பணிப்பாளர் மெவன் சம்பத் சுபசிங்க ஆரச்சி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.




