அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தேவை இன்றில்லை – ரஞ்சன் ராமநாயக்க.!!!
அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தேவை இன்றில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்று முழு நேரம் சினிமாதுறையில் ஈடுபடுகின்றேன். அரசியலுக்கு வருவது குறித்து எந்த சிந்தனையும் இல்லை. இந்த அரசை ஏனைய அரசுடன் ஒப்பிடுகையில் சிறந்ததாகவே தோன்றுகிறது.
திருடர்கள் பிடிக்கப்படுகின்றனர். அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுள்ளன. இவற்றை நான் சாதகமாவே கருதுகின்றேன். அரச தரப்பினர் பொய் கூறுவதாக குற்றச்சாட்டு இருக்கிறது. பொய் சொல்வது மாபெரும் குற்றமில்லையே.
மோசடியால் சேர்த்த சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டதிட்டங்கள் பாராட்டக் கூடிய விடயமாகும். நல்லாட்சி அரசாங்கம் இரண்டு மாதங்களில் மத்திய வங்கியை கொள்ளையடித்தது போல் இவர்கள் செய்யவில்லை. நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது.
வெலிகமை பிரதேச சபைத் தலைவர் பாதாள குழுத் தலைவர் என தெரிவிக்கப்படுகிறது. அவருக்கும் மக்களே வாக்களித்துள்ளனர். அவருக்கும் ஒரு அரசியல் கட்சியே வாய்ப்பளித்துள்ளது. அதனால் நான் அன்று சொன்னது போல, அரசியலில் அனைவரும் நண்பர்கள்தான். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது நண்பர் தவறு செய்தாலும் தண்டனை கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்.
அதனால் அவர்களின் கட்சியில் ஊழல்வாதிகள் இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். அப்படி இருந்தாலும் அவர் வெளியேற்றப்படுவார் என்பது எனது நம்பிக்கையாகும்” எனத் தெரிவித்துள்ளார்.