ஓட்டமாவடி மற்றும் நிந்தவூர் தவிசாளர்கள் பதவி இழப்பு; உறுப்பினர் பதவி ரத்து – வர்த்தமானி வெளியீடு.!!!
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக செயற்பட்டு வந்த எம்.எச்.எம். பைறூஸ், தனது உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ வர்த்தமானி அறிவித்தல் இன்று (01) வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து போட்டியிட்ட பைறூஸ் வெற்றி பெற்று, பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து தவிசாளர் பதவியை ஏற்றுக்கொண்டிருந்தார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையில், பைறூஸ் தனது உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தெரிவத்தாட்சி அலுவலர் என். ரேகன், பைறூஸின் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்று (01) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதேபோல், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரும் உறுப்பினருமான ஆதம்பாவா அஸ்பர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அஸ்பர் வகித்து வந்த நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அப்பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலர் கசுன் ஸ்ரீநாத் அத்தநாயக்க இன்று (01) பிரகடனப்படுத்தியுள்ளார்.
இத்தகவல் தொடர்பான அலுவலர் ஒப்பமிட்ட தேதி அக்டோபர் 24 என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.



