தெதுரு ஓயா உட்பட பல நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறப்பு – மக்களுக்கு அவசர எச்சரிக்கை.!!!
(கற்பிட்டி – எம்.ஹெச்.எம். சியாஜ்)
கலா ஓயா, தெதுரு ஓயா மற்றும் மீ ஓயாவைச் சுற்றியுள்ள மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை திறக்கப்பட்டுள்ளன. இதன்படி, 2 வான் கதவுகள் – தலா 06 அடி, 4 வான் கதவுகள் – தலா 04 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. திறக்கப்பட்ட வான் கதவுகளிலிருந்து வினாடிக்கு 19,400 கனஅடி நீர் தெதுரு ஓயாவிற்குள் வெளியேற்றப்படுகிறது.
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 5 வான் கதவுகள் – தலா 2 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து வினாடிக்கு 2,244 கனஅடி நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது.
அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் – தலா 01 அடி திறக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து வினாடிக்கு 590 கனஅடி நீர் கலா ஓயாவிற்கு செல்கிறது.
இகினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் – தலா 01 அடி திறக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து வினாடிக்கு 2,000 கனஅடி நீர் மீ ஓயாவிற்கு வெளியேறுகிறது.
தப்போவ நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் – தலா 2 அடி திறக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து வினாடிக்கு 1,760 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.
இந்த நீர்வெளியீடு காரணமாக கீழ்நீர் பிரதேசங்களில் தாழ்வான பகுதிகளில் திடீர் நீர்மட்ட உயர்வு ஏற்படக்கூடியதால், பொதுமக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.