நல்லிணக்கமான இலங்கையை உருவாக்க தமிழ்–முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு.!!!
நாடு எந்தவொரு இனவாத வலையிலும் சிக்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து ஒவ்வொரு குடிமகனும் சுதந்திரமாக வாழும் சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
இலங்கை தினத்தினை வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கான திட்டங்கள் குறித்து விளக்கமளிப்பதற்காகவும், அதனை மேலும் வலுப்படுத்த தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சித் தலைவர்களிடமிருந்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் பெறுவதற்காகவும் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு “இலங்கை தினம்” கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதுதொடர்பான அரசாங்கத்தின் முயற்சிகள் அனைத்து கட்சித் தலைவர்களாலும் பாராட்டப்பட்டதுடன், தங்கள் பரிந்துரைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.
ஜனாதிபதி வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்பாடு மற்றும் மத–இன ஒற்றுமையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் தலைமையின் கீழ் இலங்கை தின தேசிய நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில், அரசியல், மத, கலாசார பன்முகத்தன்மைகளுக்கு அப்பால், அனைவரும் ஒன்றிணையும் ஒரு பொதுத்தளத்தை உருவாக்கும் வகையில் நிகழ்வுகளும் செயற்பாடுகளும் வடிவமைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ஏற்பாட்டுக் குழுவுக்கு அறிவுறுத்தினார்.





