அல் குர்ஆன் மனன நிறைவும் – வாராந்த அல் குர்ஆன் விரிவுரை அங்குரார்ப்பண நிகழ்வும்.!!!
(எம்.ரி.எம். யூனுஸ்)
புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலின் கீழ் இயங்கி வரும் ஹிக்மா பகுதிநேர அல் குர்ஆன் மனன பீடத்தின் மாணவர் நவாஸ் முஹம்மத் ஹமாஸ் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், வாராந்த அல் குர்ஆன் விரிவுரை அங்குரார்ப்பண நிகழ்வும் இன்று (08) புதன்கிழமை, புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
ஹிக்மா குர்ஆன் மத்ரஸாவின் அதிபர் எம்.எம்.எம். இல்ஹாம் பலாஹி அவர்களின் நெறிப்படுத்தலில், புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலின் தலைவரும், நகரசபை உறுப்பினருமான எம்.ஐ.எம். ஜவாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், வாராந்த அல் குர்ஆன் விரிவுரை அங்குரார்ப்பண நிகழ்வின் முதலாவது விசேட மார்க்க சொற்பொழிவினை அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் எம்.ஏ. காலிதீன் பலாஹி அவர்கள் நிகழ்த்தினார்.
இதன்போது ஹாபிழாக வெளியேறிய மாணவனுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டதோடு, மாணவரை பயிற்றுவித்த முஅல்லிம்கள், மாணவனின் பெற்றோரும் கௌரவிக்கப்பட்டனர். இதுவரை மொத்தமாக 17 மாணவர்கள் ஹிக்மா பகுதிநேர அல் குர்ஆன் மனன பீடத்தில் அல் குர்ஆனை முழுமையாக மனனமிட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் காத்தான்குடி ஜம்இய்யதுல் பலாஹ் அறபுக் கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஏ.ஜி.எம். அமீன் பலாஹி, பள்ளிவாயலின் ஆயுட்கால பேஷ் இமாம் மெளலவி ஆதம் லெப்பை பலாஹி, உலமாக்கள், பள்ளிவாயல் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
















