காத்தான்குடியில் நிவாரண சேகரிப்புப் பணிகள் – இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.!!!
● வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்கள் சேகரிப்பு.
(எம்.ரி.எம்.யூனுஸ்)
காத்தான்குடி சம்மேளனத்தின் ஏற்பாட்டில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நிவாரண சேகரிப்புப் பணிகள் இரண்டாவது நாளாகவும் இன்று (01) நடைபெற்று வருகின்றது.
உதவி வழங்க விரும்புவோர் இரவு 12:00 மணிவரை நிவாரணப் பொருட்களை ஹிஸ்புழ்ழாஹ் கலாச்சார மண்டபம், ஜமியுழ் ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயல், முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல், மீரா ஜூம்ஆ பள்ளிவாயல், பதுரியா ஜும்ஆ பள்ளிவாயல், முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் (அல்-அக்ஸா), நூரானியா ஜூம்ஆ பள்ளிவாயல், பாலமுனை மற்றும் காங்கேயனோடை பிரதேசங்களில் வழங்க முடியும்
அவசியம் தேவைப்படும் முக்கிய உணவு, சுகாதாரப் பொருட்களாக 200g பால் மா, சமஹன், சவர்க்காரம், பனடோல், தலையணை, குடிநீர் போத்தல் மற்றும் சோப், பிறஸ், சிக்னல், வைப்பர், மப்லர், ரின்சோ, குளேரக்ஸ் போன்ற பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிக அவசரமாக தேவைப்படுகிறது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா, நகரசபை, வர்த்தக சங்கம், அரசியல் பிரமுகர்கள், சமூக அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் இணைந்து நிவாரணப் பொருட்களை சேகரித்து வருகின்றனர்.
மக்களின் பெருந்துணை மற்றும் ஒத்துழைப்புடன் சேகரிக்கப்பட்ட முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் இன்று மூதூர், கிண்ணியா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு தேவையான உதவிகளை ஆர்வத்துடன் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேச பொதுமக்கள் வழங்கி வருகிறார்கள் என்று சம்மேளன நிர்வாகிகள் தெரிவித்தனர்.