காத்தான்குடி சாவியா மகளிர் வித்தியாலய மாணவிகள் பாதுகாப்பு கருதி வீதித்தடை அமுல் – இன்று தொடக்கம் நடைமுறை.!!!
காத்தான்குடி 01, மட்/மம/சாவியா மகளிர் வித்தியாலய மாணவிகளின் வீதி பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் இன்று (03) முதல் இனிவரும் அனைத்து பாடசாலை நாட்களிலும் வீதித்தடை அமுல்படுத்தப்படுகிறது.
அதன்படி, காலை 7.00 மணி முதல் 7.30 மணி வரை மற்றும் பிற்பகல் 1.55 மணி முதல் 2.15 மணி வரை குறித்த வீதி மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதித்தடை நடவடிக்கை இன்று (03) பாடசாலை அதிபர் அஸ்மியா பேகம் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
இது தொடர்பான கோரிக்கை நீண்ட காலமாக நிலவி வந்த நிலையில். கடந்த ஜூலை மாதம் முன்னாள் அதிபர் எஸ்.எம். முஜீப் இதற்கான எழுத்து மூல கோரிக்கையை மீரா பள்ளி வட்டார நகர சபை உறுப்பினர் ஈ.எம். றுஸ்வின் அவர்களுக்கு அனுப்பியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நகரசபை உறுப்பினர் றுஸ்வினின் தொடர் முயற்சியின் பலனாக, காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் மற்றும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுடன் ஆலோசித்து, இதன் சாதக பாதகங்களை ஆராய்ந்த பின்னர், குறித்த வீதித்தடை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.





