ஒரே இரவில் 3 வீடுகளில் கொள்ளை: மோப்ப நாய் உதவியால் 4 பேர் கைது.!!!
முள்ளிப்பொத்தானை பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இப்பகுதியில், நேற்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில், அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் மூன்று வீடுகளில் புகுந்து திருட்டு செய்துள்ளனர்.
பொலிஸார் தெரிவித்ததாவது,
முதல் வீட்டில் இருந்து சுமார் 10 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது வீட்டில் இருந்து ரூபாய் 70,000 ரொக்கம் திருடப்பட்டுள்ளது.
மூன்றாவது வீட்டில் இருந்து குவைத் தினார் மற்றும் இந்திய ரூபாய் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த தம்பலகாமம் பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்தனர். விசாரணையின் போது பயன்படுத்தப்பட்ட பொலிஸ் மோப்ப நாய், சம்பவ இடங்களில் இருந்து மோப்பம் பிடித்து சந்தேகநபர்கள் மறைந்திருந்த வீட்டை துல்லியமாக அடையாளம் கண்டது.
இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த வீட்டில் இருந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்னர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்ற இருவர் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையிடப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறுகிய நேரத்திற்குள் சந்தேகநபர்களை கைது செய்த பொலிஸாரின் விரைவான நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.