பாடசாலை மாணவர்கள் மத்தியில்; போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு – அமைச்சர் வசந்த சமரசிங்க.!!!
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளமை பாரதூரமானது. போதைப்பொருள் வர்த்தகத்துக்கும், அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.ஆகவே போதைப்பொருள் ஒழிப்புக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென உணவு பாதுகாப்பு மற்றும் வணிக, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற அரச அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
போதைப்பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கைகள் சகல அமைச்சு மற்றும் திணைக்கள மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளமை பாரதூரமானதுடன், துரதிஸ்டவசமானது.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் வியாபாரத்துக்குமிடையில் அரசியல் தொடர்பிருப்பதாக கடந்த காலங்களில் குறிப்பிடப்பட்டது. எமது அரசாங்கத்துக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது.இதனால் தான் போதைப்பொருள் ஒழிப்புக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் ஒழிப்புக்கு கல்வி அமைச்சு மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.