2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு – வாக்கெடுப்பு இன்று மாலை.!!!
● எதிர்க்கட்சிகள் எதிராக வாக்களிக்கத் தீர்மானம்…
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முக்கியமான வாக்கெடுப்பு இன்று மாலை 6.00 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 7ஆம் திகதி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகச் செயல்படும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, வரவு செலவுத் திட்ட விவாதம் டிசம்பர் 5ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலை விவாதம் நாளை (15) முதல் தொடங்கி 17 நாட்கள் நடைபெறும். மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் விவாதங்கள் நடைபெறும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் ஒருமித்தமாக எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளன.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி. டி.வி. சானக்க, “இந்த வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை; எனவே இதற்கு எதிராக வாக்களிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர், எம்.பி. கயந்த கருணாதிலக்க அறிவித்துள்ளார்.