இலங்கை வந்தடைந்த; ஜப்பானின் விசேட மருத்துவர்கள் குழு.!!!
இலங்கை எதிர்நோக்கும் தற்போதைய அனர்த்த நிலையை முன்னிட்டு, அவசர மருத்துவ சேவைகளை மதிப்பீடு செய்வதற்காக ஜப்பான் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் குழு நேற்று (30) மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
ஜப்பானின் நரிட்டா விமான நிலையத்திலிருந்து ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் UL-455 விமானத்தில் பயணித்த இந்த குழு, மாலை 7.00 மணியளவில் நாட்டை வந்தடைந்தது.
5 ஜப்பானிய சிறப்பு மருத்துவர்களுடன், ஜப்பான் அரசாங்கத்தின் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகளும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் இலங்கையில் தற்போது நிலவும் மருத்துவ வசதிகள், அவசர சிகிச்சை திறன், மருந்துகள் மற்றும் தேவையான உபகரணங்களின் பற்றாக்குறை உள்ளிட்ட முக்கிய துறைகளை விரிவாக ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், இலங்கைக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவ உதவி, நவீன உபகரணங்கள் மற்றும் நிபுணத்துவ ஆதரவு தொடர்பான முழுமையான அறிக்கை ஜப்பான் சுகாதார அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.



