2026 ஹஜ் யாத்திரை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இலங்கை – சவுதி அரேபியாவுடன் புதிய புரிந்துணர்வு.!!!
2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை ஒப்பந்தத்தில் இலங்கை மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளும் நேற்று (09) சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் கையெழுத்திட்டன.
இலங்கையின் மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் முனீர் முளாபர் மற்றும் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான பிரதி அமைச்சர் அப்துல்பத்தா பின் சுலைமான் மஷாத் ஆகியோர் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரையில் பங்கேற்கும் இலங்கையர்களுக்கான சேவைகள், வசதிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து இரு தரப்பினரும் பரஸ்பர ஒத்துழைப்பை உறுதிப்படுத்தினர்.
நேற்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, 2026 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் உத்தியோகபூர்வ ஹஜ் ஒதுக்கீடு 3,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்நிகழ்வில் பிரதி அமைச்சர் முனீர் முளாபர், 2025 ஹஜ் பயணத்தை வெற்றிகரமாக நடத்த சவுதி அதிகாரிகள் அளித்த ஒத்துழைப்புக்கு நன்றியைத் தெரிவித்தார்.
அதேவேளை, 2026 ஹஜ்ஜை மேலும் எளிதாக்க சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்துடன் நெருங்கிய ஒத்துழைப்பை தொடர இலங்கை தயாராக இருப்பதையும் அவர் வலியுறுத்தினார்.
அவர் மேலும், நாட்டில் ஹஜ் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் ஹஜ் சட்டம் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளித்தார்.
இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹ்லர், குழுவின் பங்கும் வரவிருக்கும் யாத்திரைக்கான செயல்முறைகளும் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
இதற்கிடையில், பிரதி அமைச்சர் முனீர் முளாபர், சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் பவ்ஸான் அல் ரபியாவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும், ஹஜ் சேவை வழங்குநர்களுடனும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில், முஸ்லிம் மத மற்றும் கலாச்சார விவகாரத் துறையின் இயக்குநர் எம்.எஸ்.எம். நவாஸ், ஜித்தாவில் உள்ள செயல் பிரதி தூதர் ஜெனரல் மஃபூசா லாபீர், டாக்டர் அஜீஸ் முகமது ஷிஹான், மற்றும் டாக்டர் எம்.என்.எம். அஷ்ரஃப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

