நீராடச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு.!!!
கெசெல்கமுவ ஓயா பகுதியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் இன்று (05) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறித்த பகுதியில் நண்பர்களுடன் நேற்று (04) பிற்பகல் நீராடிக் கொண்டிருந்தபோது மாணவன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போனதாக தெரியவந்துள்ளது.
மாணவன் நீரில் மூழ்கியதை கவனித்த அவரது நண்பர்கள் உடனடியாக காப்பாற்ற முயன்றாலும், அந்த இடம் அதிக ஆழம் கொண்டிருந்ததால் அவர்களது முயற்சி வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
பின்னர் இலங்கை கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, காணாமல் போன மாணவனின் சடலம் இன்று பிற்பகல் நீரிலிருந்து மீட்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










